தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்"

தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்" தீபாவளி என்றால் தீபம் + வளி ... வளி என்றால் வரிசை என்று பொருள். வரிசையாக தீபங்களை வைத்துக் கொண்டாடப்படுகிற பண்டிகையாக இருந்ததால் தீபாவளி என்ற காரணப் பெயராக நிலைத்துவிட்டது! தீமையை விலக்கும் உண்மையாகவும், இருளை விலக்கும் ஒளியாகவும் இந்த விழாவைச் சொல்கிறோம். இந்தியத் தத்துவ மரபில் ஒளி என்பது ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. எனவே தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்றப்படும் எண்ணெய் விளக்குகள் மனிதனுக்கு ஞானத்தைக் கொண்டு வருவதாக ஐதீகம். பஞ்சாங்கங்களில் தீபாவளியன்று காலையில் "சந்திர தரிசனம் " என்றோ சந்திரோதயத்தின் போது கங்கா ஸ்நானம் செய்ய உத்தமம் என்றோ காணப்படும். சந்திர தரிசனம் "சந்திர தரிசனம்" என்றால் என்ன? ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக பிறைச் சந்திரன் மெல்லியதொரு கீற்றாகத் தோன்றும். இது கிழக்கில் அடிவானத்தில் தெரியும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது. ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது இருக்கவேண்டும். இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆகையால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை "கங்காஸ்நானம்" என்று கூறுகிறார்கள். கதை, கதைகள் தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நம் நாட்டில் ஏராளமான கதைகள் உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கதையை தங்கள் பேரக் குழந்தைகளுக்கு பாட்டிகள் சொல்லி வருகிறார்கள். நம் ஊரில் தாத்தா, பாட்டிகள் சொல்லும் ஜெனரல் கதை 'நரகாசுர வதம்'. பூமாதேவியோட மகன்தான் நரகாசுரன்! நரகாசுரன் பிரம்மாகிட்ட ஒரு வரம் வாங்கினான். தன்னோட தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாதுன்னு பிரம்மனிடம் வரம் வாங்கியிருந்தான். வரத்தை வாங்கீட்டோம்ங்கிற தைரியத்துல அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களை பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான். எப்படிப்பட்ட தொல்லைன்னா ராத்திரியில யாரும் வீட்டுல வெளக்கேத்தக் கூடாதுன்னு உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! வெளிச்சவிளக்குகளை வீட்டில் வைத்தவர்களின் தலைகளைக் கொய்தான். நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், பகவான் கிருஷ்ணரிடம் முறையிட்டனர். கிருஷ்ணரும் நரகாசுரனை அழிக்கிறேன் என்று சொல்லி மக்களுக்கு ஆறுதல் சொன்னார். பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை எதிர்த்துச் சண்டை போடுறதுன்னு முடிவு செஞ்சார் பகவான் கிருஷ்ணர். சண்டை ஆரம்பிச்சுச்சு. போர் நடக்கும்போது நரகாசுரன் விட்ட அம்பால் கிருஷ்ணர் மயக்கமடையிற நிலைக்கு ஆளாயிட்டார். இதனால் கோபமான சத்தியபாமா, நரகாசுரனோட சண்டை போட்டு அவனை வெட்டி வீழ்த்தினாங்க. நரகாசுரன் சாகிறதுக்கு முன்னாடி தன் தாயிடம் ஒரு விண்ணப்பம் செஞ்சான். எனக்குச் சாவு வரதுக்கு காரணம், நான் எல்லோரையும் வெளக்கேத்தக் கூடாதுன்னு சொன்னதுதான்! அதனால நான் இறக்கிற இந்த நாளை மக்கள் வெளக்கேத்தி சந்தாஷமாக் கொண்டாட நீங்கதான் ஏற்பாடு செய்யணும்ன்னு கேட்டான். பூமாதேவி நரகாசுரனின் கோரிக்கையை நிறைவேத்துறதா ஒத்துக்கிட்டாங்க. அதனால நரகாசுரன் என்ற அந்தக் கொடிய அரக்கன் இறந்து ஒழிந்த அந் நாளை தீபங்கள் ஏற்றி வெளிச்சத் திருவிழாவாக.... தீபத்திருவிழாவாக எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. வட நாட்டில்.. ஆனால், வட நாட்டிலோ, 14 ஆண்டுகள் வன வாசத்திலிருந்து ராமரும், சீதையும் நாடு திரும்பும் நாள் தான் தீபாவளி என்று கொண்டாடுகின்றனர். வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார்கள். ராமர்சீதா தேவியை வரவேற்க இந்த விளக்குகள் என்பது ஐதீகம். மேலும் தீபாவளியை பொதுவாக ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஐந்து நாட்களிலும் விரதமும் இருக்கிறார்கள். குஜராத்திலோ, லட்சுமி பூஜையாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். பொன்னும், பொருளும் கொழிக்க வேண்டும் என்று லட்சுமியை வேண்டி நடத்தப்படும் பூஜை தான் தீபாவளி என்கிறார்கள் மார்வாரி சமூக மக்கள். சீக்கியர்களின் தீபாவளி சீக்கியர்கள் தீபாவளி கொண்டாடுகிற..... தீபாவளிக்கு சொல்கிற காரணம் வேற. சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான குரு கோவிந்த சிங் குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையிலிருந்து விடுபட்ட நாளைத்தான் தீபாவளியாகக் கொண்டாடுவதாச் சொல்கிறார்கள். அரக்கன் ராவணனை, ராமன் அழித்தொழித்த நாள்தான் தீபாவளி என்று சொல்வாரும் உண்டு. மகாவிஷ்ணு நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்து உலகத்தில் உண்மையை நிலை நாட்டிய நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்போரும் உண்டு ! சிங்கப்பூர் செய்த சிறப்பு துர்கா தேவி மகிசாசுரனை வதம் செய்தழித்த நன்னாளே தீபாவளித் திருநாள் என்று சொல்வதும் உண்டு. சொல்லப்படுகிற அனைத்துக் கதைகளிலும் உள்ள ஒரே ஒற்றுமை விஷ்ணுவின் அவதாரம் இருப்பதுதான் ! தீபாவளிப் பண்டிகையின் பிறப்பிடமான இந்தியாவில் அதற்கு செய்யாத சிறப்பை சிங்கப்பூர் செய்திருக்கிறது. ஆம்! தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பித்துத் தபால் தலை வெளியிட்ட நாடு சிங்கப்பூர் மட்டும்தான்.

Comments